"

Tuesday, April 24, 2018

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு மே 3-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்

ஆன்-லைன் மூலம் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு மே 3-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

இது குறித்து கே.பி.அன்பழகன் கூறியதாவது:- இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது.
ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவு செய்வது அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி பதிவு செய்ய கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் முதல் வாரம் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. ஜூலை மாதம் முதல் வாரம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடங்குகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 16-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்- லைன் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஆன்-லைன் வசதியை பெற முடியாத நிலையில் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை பற்றி தனக்கு தெரியாது என்று கருதும் மாணவர்களுக்காகவும் தமிழகத்தில் 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த உதவி மையத்தை மாணவர்கள் அணுகலாம்.

அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ்களும் உதவி மையத்தில் தான் சரிபார்க்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் தான் அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும் என்று இல்லை. அவரது பெற்றோரோ அல்லது உறவினரோ அசல் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கட்டணம் ரூ.500 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ.250 ஆகும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் ஆன்-லைன் மூலம் பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கான முன்வைப்பு தொகையை ஆன்-லைன் மூலம் செலுத்திய பின்பு தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்யலாம். எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் வரிசையாக பதிவு செய்யலாம். இதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்படும்.

இதன்பின்பு, தற்காலிக இட ஒதுக்கீடு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களது லாக்-இன் மூலமாக மறுநாள் பார்த்துக்கொள்ளலாம். இதை 2 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கலந்தாய்வு குறித்த தகவல் அவ்வப்போது விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்படும். அதேபோன்று இ-மெயிலுக்கும் தகவல் அனுப்பப்படும். மேலும், தகவல் அறிய விரும்புபவர்கள் https://tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். அதேபோன்று 044-22359901-ல் தொடங்கி 22359920 வரையிலான தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, தொழிற்துறை படிப்புக்கான கலந்தாய்வு, ஆதிதிராவிடர் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்படாத பட்சத்தில் அந்த இடத்தை நிரப்ப ஆதிதிராவிட மாணவர்களுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு, துணை கலந்தாய்வு ஆகியவை நேர்முக கலந்தாய்வாக சென்னையில் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Adbox