"

Friday, February 16, 2018

இனிமே நீ இப்படி பண்ணக் கூடாது' - தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு கலெக்டர் நேரில் அறிவுரை

`
"நான் தப்பே பண்ணலை. ஆனால், தலைமை ஆசிரியர் என்னை அடிச்சு, அவமானப்படுத்திட்டார். அதனால் அரளி விதையைத் தின்னுட்டேன் சார். தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுங்க சார்" என்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அரளி விதை தின்று தற்கொலைக்கு முயன்ற மாணவர் வாக்கமூலம் கொடுத்துள்ளார்.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை ஒன்றியத்தில் உள்ள ஜோதிவடம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்.
இவர் உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், 'நான் பண்ணாத தப்புக்கு என்னை அடித்துவிட்டார். பள்ளி தலைமை ஆசிரியர் படித்துக்கொண்டிருந்த என்னை தேவையில்லாமல் அடித்துவிட்டார். ஒரு தவறும் செய்யாதபோது அடித்ததற்கு அவருக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும். என் பெயர் பிரகாஷ். இந்தத் தவறு செய்த அந்தத் தலைமை ஆசிரியருக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும். என் உயிருக்கு எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும், உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த பிரகாஷை உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் அவர் நலமாக, இதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ்,கல்வித்துறை மாவட்ட அதிகாரிகளை அழைத்துக்கொண்டு பழங்களோடு மருத்துவமனைக்குச் சென்று பிரகாஷை நலம் விசாரித்தார். "ஏன் இப்படிச் செய்தாய்..?" என்று கேட்டதற்காகத்தான், கலெக்டரிடம், "நான் தப்பே பண்ணலை. ஆனால், தலைமை ஆசிரியர் என்னை அடிச்சுட்டார். அவர்மீது நடவடிக்கை எடுங்க சார்" என்று சொல்லி இருக்கிறார் பிரகாஷ்.
அதற்கு ஆட்சியர், "தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், நீ இனிமே தற்கொலைக்கு முயலக் கூடாது. வாழ்க்கைங்கிறதே சவால்களை, பிரச்னைகளை காலம் முழுக்க எதிர்கொள்ளனும். அதில், சிறிய விசயத்திற்கே இப்படித் தற்கொலை முயற்சிவரை போகக்கூடாது. மனத்திடத்தை வளர்த்துக்கணும்" என்று அறிவுரை சொல்ல, முகம் மலர்ந்த பிரகாஷ், "கண்டிப்பாக என்ன நடந்தாலும் இனிமேல் இதுபோல் தவறான, முடிவு எடுக்க மாட்டேன் சார்" என்று சொல்ல,"சபாஷ்" என்றபடி கிளம்பினார்கள் அதிகாரிகள்.

No comments:

Post a Comment

Adbox