தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர். ஒரு காலத்தில் ஓகோவென வாழ்ந்த பூல்பாண்டியனின் குடும்பம் நொடிந்து போய் விட்டது. அதனால் தனது வாழ்வியலுக்காக பிச்சை எடுப்பதை தொழிலாகச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பூல்பாண்டியனுக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். அவரது மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் தனிமை நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், தனது மகன் வீட்டில் வசித்துள்ளார். அப்போது அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் இவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். அதனால் செய்வதறியாமல் தவித்த அவர் கால்போன போக்கில் சென்றுள்ளார்.
திருச்செந்தூர் சென்ற அவர் அங்கேயே அசதியுடன் படுத்திருக்கிறார். பசி மயக்கத்தில் தரையில் கிடந்த அவரது கோலத்தைப் பார்த்தவர்கள் அவருக்கு உதவுவதற்காக பணத்தைப் போட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள். எழுந்து பார்த்த அவர் அந்த பணத்தைக் கொண்டு உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்னர், அதையே தனது தொழிலாக மாற்றிக் கொண்டார். தனது நிலையை நினைத்து வருந்திய அவர், தான் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு மாணவர்களின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
அதனால், பிச்சை எடுத்துக் கிடைக்கும் பணத்தைச் சேமித்த அவர் அதனை பள்ளிக் குழந்தைகளின் தேவைக்குப் பயன்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் பூல்பாண்டியன், அங்கு சில காலம் தங்கியிருந்து பிச்சை எடுக்கிறார். அதில் கிடைக்கும் பணத்தை அங்கேயே ஏதாவது ஒரு பள்ளிக்குச் சென்று உதவி செய்து விடுகிறார். தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு அவர் உதவி செய்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் உள்ள பண்ணையார்குளம், இளையநயினார்குளம், பாப்பான்குளம், ராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகளுக்கு 3 கேரம் போர்டுகள், மாணவர்கள் தண்ணீர் குடிக்க உதவும் வகையில் டிரம்கள், டம்ளர்கள், ஸ்கிப்பிங் கயிறுகள், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை 18,000 ரூபாய் மதிப்பில் வாங்கிக் கொடுத்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் சேமித்த பணத்தில் இருந்து அவர் இந்த உதவியைச் செய்துள்ளார்.
இது பற்றி பூல்பாண்டியன் கூறுகையில், ''என்னால் பிறருக்கு பயன் இருக்க வேண்டும் என விரும்பினேன், அப்போது தான் பள்ளிகளுக்கு உதவும் முடிவுக்கு வந்தேன். நான் எந்த ஊரில் பிச்சை எடுக்கிறோனோ அந்த ஊரில் உள்ள அரசு பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கி உதவுகிறேன். என்னுடைய வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.
No comments:
Post a Comment