"

Friday, February 23, 2018

கதிர்வீச்சால் கலங்கும் கல்பாக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 220 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 160 முதல் 170 மெகாவாட் மின்சாரம் வரை ஒவ்வோர் அலகிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், அணு உலை அலகு 1-ல் குளிர்விக்கப் பயன்படும் தண்ணீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டதாகக் கூறி, கடந்த ஜனவரி 8-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுபோல் அல்லாமல், இந்தமுறை அணுக்கதிர் வீச்சின் அளவு அதிகமானதாலேயே அணு உலை நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரம் வெளியில் கசியவே, அணு உலைக் கசிவுக்கான காரணத்தைக் கண்டறிந்ததாகக் கூறி கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

அணு உலையின் எந்தப் பகுதியில் மின் கசிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை விஞ்ஞானிகளால் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து மும்பையில் உள்ள தலைமையகத்திடம், கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பாக உதவி கோரினர். இதையடுத்து மும்பையில் உள்ள தலைமையகத்தில் இருந்து விஞ்ஞானிகள் வந்து அணுக்கதிர் வீச்சுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஜனவரி 8-ம் தேதி இரவு அணு உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. பின்னர், ஜனவரி 22-ம் தேதி மீண்டும் தொடங்கியது. இருப்பினும் காரணத்தைக் கண்டறிய முடியாததால், ஜனவரி 30-ம் தேதி அணு உலையின் இயக்கத்தை நிறுத்திவிட்டனர். பொதுவாக அணு உலை அமைந்துள்ள பகுதியில் உள்ள கதிர்வீச்சின் அளவு டி.ஏ.சி/ஹவர் என்ற அலகால் அளக்கப்படும். அதன்படி, கதிர்வீச்சு கசிவின் அளவு 1,000 DAC/Hour என்ற எல்லையை எட்டிவிட்டால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், அணுஉலை இரண்டாவது முறையாக நிறுத்தப்பட்ட ஜனவரி 30-ம் தேதி இந்த அளவு 4,000 DAC/Hour ஆக அதிகரித்துள்ளது.

அணு உலையின் எரிபொருள் நிரப்பும் பகுதிக்கு அருகில் கதிர் வீச்சு இருக்கலாம்' என்பது அவர்கள் அனுமானம். இதையொட்டி எரிபொருள் கொண்டுசெல்லும் 16 சேனல்களிலும் அவர்கள் ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதில், 12 சேனல்களில் ஆய்வையும் நடத்தி முடித்துவிட்டனர். இதில், P-10 எனப்படும் 10 வது சேனலில் அணுக்கதிர் வீச்சு இருப்பதாகக் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அந்தக் குறிப்பிட்ட சேனலில் மும்பையிலிருந்து வந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். ஆனால், 'அந்தப் பகுதியில் கதிர்வீச்சு கசிவில்லை' என்று அவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து, பழைய முறையைக் கைவிட்டுவிட்டு, மீண்டும் புதிய முறையில் கதிர்வீச்சுக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் நேற்று (22.2.2018) முதல் ஈடுபட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Adbox